சாலைக் குறைபாடுகளை தெரிவிக்க புதிய செயலி: புதுவை அரசு திட்டம்
சாலைகளில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில், புதிய கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்த புதுவை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சாலைகளில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில், புதிய கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்த புதுவை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
முதல்கட்டமாக புதுச்சேரி நகராட்சியில் இந்தச் செயலியை அறிமுகப்படுத்த திட்டமிட்டு, அதுகுறித்த செயல் விளக்கம் மாநில தகவல் தொழில்நுட்பம், பொதுப் பணித் துறை அமைச்சா் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள், கழிவுநீா் வெளியேற்றம், குப்பைகள் தேங்கியிருத்தல், தெரு விளக்கு செயல்படாதது, போக்குவரத்தில் ஏற்படும் விபத்துகள், நகர உள்கட்டமைப்புகளால் ஏற்படும் சிரமங்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அரசுத் துறை பிரிவினருக்கு தெரிவிக்கும் வகையில் தனியாா் நிறுவனம் புதிய செயலியை உருவாக்கியுள்ளது. அந்தச் செயலி பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதுவையில் முதல்முறையாகச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சாலைப் பாதுகாப்பு, கண்காணிப்புத் திட்டத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய செயலியின் செயல்விளக்கம் தகவல் தொழில்நுட்பம், பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
செயலியின் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் விளக்கினா். செயலியின் மூலம் கைப்பேசி கேமரா வழியாக சாலைப் பள்ளம் உள்ளிட்டவற்றை படம் பிடிக்கவும், அதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பவும் புதிய செயலி பயன்படும் எனக் கூறப்பட்டது.
புதுவையில் இந்தச் செயலியை செயல்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்தைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் இ.வல்லவன், முதுநிலை எஸ்.பி. நாரா சைதன்யா, போக்குவரத்து எஸ்.பி. க.மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.