முகப்பு
புதுச்சேரி

பேருந்தில் ஜெர்மனி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது

புதுச்சேரியில் சொகுசு பேருந்தில் ஜெர்மனி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெங்களூரு பட்டதாரிக்கு சக பயணிகள் அடி கொடுத்து கீழே இறக்கி விட்டனர்.

Updated On : 7 மே, 2023 at 10:19 AM
பகிர்:

புதுச்சேரியில் சொகுசு பேருந்தில் ஜெர்மனி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெங்களூரு பட்டதாரிக்கு சக பயணிகள் அடி கொடுத்து கீழே இறக்கி விட்டனர். இந்த புகாரை அடுத்து காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்  திண்டிவனம் தாலுகா கோணமங்கலம் கிராமத்தில் தங்கி சமூக சேவை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பெங்களூரில் உள்ள தனது தோழியை பார்க்க முடிவெடுத்து புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து படுக்கை வசதியுடன்கூடிய தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். 

அப்போது அவருக்கு முன்வரிசையில் படுக்கையில் இருந்த சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் திடீரென ஜெர்மன் நாட்டு இளம்பெண்ணின் படுக்கைக்கு அருகில் காலியாக இருந்த படுக்கையில் வந்து படுத்துள்ளார். அதன்பிறகு ஓடும் பேருந்தில் அந்த இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிடவே சக பயணிகள் பேருந்தை நிறுத்தினர். 

Advertisement

பின்னர் அந்த இளைஞர் நடுவழியில் இறக்கி விடப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண், பெங்களூரு பயணத்தை முடித்துவிட்டு புதுச்சேரி திரும்பி வந்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான காவல் துறையினர், இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் மேற்கண்ட அடையாளம் தெரியாத வாலிபர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். 

தனியார் சொகுசு பேருந்தில் சீட் முன்பதிவுக்காக அவர் கொடுத்திருந்த செல்போன் நம்பர் மூலம் இளைஞரை தனிப்படை அடையாளம் கண்டது. விசாரணையில் அவர், பெங்களூரைச் சேர்ந்த சரத் (23) என்பதும், அங்குள்ள பல்கலைக்கழகத்தில் எம்ஏ பொருளாதாரம் 2ம் ஆண்டு பயின்று வருவதும் தெரியவந்தது. 

ஹாக்கி வீரரான இவர், புதுச்சேரிக்கு தனது காதலியுடன் சுற்றுலா வந்த நிலையில், சம்பவத்தன்று பேருந்தில் அவருடன் பயணித்துள்ளார். பின்னர் இரவில் அனைவரும் தூங்கியபிறகு ஜெர்மனி பெண் படுத்திருந்த படுக்கைக்கு அருகில் சென்று  பாலியல் தொந்தரவு சம்பவத்தில் ஈடுபட்டது அம்பலமானது.

இதையடுத்து பெங்களூரு விரைந்த தனிப்படை பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். பின்னர் அவரை இன்று புதுச்சேரி அழைத்துவந்த தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்பு சரத்தை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.