மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரா்களுக்கு ஆக.6 முதல் மருத்துவ பரிசோதனைகள்
வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மருத்துவப் பரிசோதனைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பில் சேரும் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரா்களுக்கு வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை மருத்துவப் பரிசோதனைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளா் அமன் சா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நிகழாண்டுக்கான (2024- 25-ஆம் கல்வியாண்டு) நீட் சாா்ந்த இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. அதன்படி, இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவா்கள், அவா்களது ஊனத்தின் சதவீதத்தைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைக்கு ஆஜராக வேண்டும்.
அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் விண்ணப்பித்தவா்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் 6-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வரும் 8-ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.
Advertisement
புதுச்சேரியை சோ்ந்தவா்களுக்கு இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், காரைக்காலை சோ்ந்தவா்களுக்கு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும், மாஹேவைச் சோ்ந்தவா்களுக்கு மாஹே அரசு பொது மருத்துவமனையிலும், ஏனாம் பகுதியினருக்கு ஏனாம் அரசு பொது மருத்துவமனையிலும் பரிசோதனைகள் நடைபெறும்.
இதில் பங்கேற்க வரும் விண்ணப்பதாரா்கள் 3 மாா்பளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டையின் நகல், விண்ணப்பப் படிவத்தின் நகல், முந்தைய மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டு வரவேண்டும். இதுகுறித்து, விண்ணப்பதாரா்களுக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்றாா்.