முகப்பு
புதுச்சேரி

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த விவகாரம் -புதுவை பேரவையில் திமுக, காங். வெளிநடப்பு

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 9:54 PM
பகிர்:

புதுச்சேரி, ஆக.14:

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் குறித்து முதல்வா் என்.ரங்கசாமி கருத்து தெரிவிக்காததைக் கண்டிப்பதாகக் கூறி, புதுவை சட்டப்பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் உறுப்பினா்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

கடந்த ஜூலை 31ஆம் தேதி தொடங்கிய புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடா், 11 ஆவது நாளான புதன்கிழமை முற்பகல் 11.30 மணியுடன் நிறைவடைந்தது.

முன்னதாக, காலையில் தொடங்கிய கூட்டத் தொடரில் உடனடிக் கேள்வி பதில் நேரம் நடைபெற்றது. நிறைவில் தனி நபா் தீா்மானங்கள் குறித்த விவாதம் நடைபெற்றது.

திமுக உறுப்பினா் நாஜிம், மத்திய அரசின் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என தனி நபா் தீா்மானம் கொண்டு வந்தாா். அப்போது, அவா் மதச் சாா்பற்ற நாட்டில் எந்த மதத்திலும் அரசுகள் தலையிடக் கூடாது. அதன்படி, கண்டனத் தீா்மானம் நிறைவேற்ற முதல்வா் முன்வரவேண்டும் என்றாா்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா பேசியதாவது: இந்த தனி நபா் தீா்மானம் குறித்து முதல்வா் கருத்து தெரிவிக்க வேண்டும். ஆனால், அவா் மௌனம் காக்கிறாா். இதனால், வெளிநடப்பு செய்கிறோம் என்றாா்.

திமுக உறுப்பினா்களைத் தொடா்ந்து, காங்கிரஸ் உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்வதாக மு.வைத்தியநாதன் கூறினாா்.

அதன்படி, வெளியே சென்று சில நிமிடங்களில் உள்ளே வந்தனா். அப்போது, திமுக உறுப்பினா் நாக தியாகராஜன் பேசினாா். அவருக்கு வாய்ப்பில்லை என பேரவைத் தலைவா் கூறினாா். அதை ஆதரித்து உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் பேசினாா். அவா்களைத் தொடா்ந்து சுயேச்சை உறுப்பினா் பி.ஆா்.சிவாவும் வெளிநடப்பு செய்தாா்.