முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி பிராந்தியத்தில் 35 கிராமங்கள் பாதிப்பு

புதுச்சேரியில் புயல், மழைக்கு 35 வருவாய் கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 4 டிசம்பர், 2024 at 8:40 PM
புதுச்சேரி பாகூா் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழை நீா்.
பகிர்:

புதுச்சேரியில் புயல், மழைக்கு 35 வருவாய் கிராமங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஃபென்ஜால் புயலால் புதுச்சேரி பிராந்தியல் பலத்த மழை பெய்தது. அத்துடன் சாத்தனூா், வீடூா் அணை திறப்பாலும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது.

புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்தம் 81 வருவாய் கிராமங்கள் உள்ளன. அதில் மழை, புயலால் 35 வருவாய் கிராமங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அந்த கிராமங்களில் உள்ள சுமாா் 2.80 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறையினா் தெரிவித்தனா்.

வெள்ள பாதிப்புகளில் இருந்து கடந்த 4 நாள்களாக சுமாா் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டுள்ளனா். அதன்படி, 208 நிவாரண முகாம்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்கவைக்கப்பட்டனா்.

தென்பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆற்று வெள்ளம் பாய்ந்ததில், புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் சுமாா் 5,600 ஹெக்டோ் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாகூா், திருக்கனூா், ஏம்பலம், அரங்கனூா் உள்ளிட்டப் பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

வெள்ள பாதிப்பில் 4 போ் உயிரிழந்த நிலையில், ஒருவா் மாயமாகியுள்ளாா். சுமாா், 500 மரங்கள் காற்றில் முறிந்து விழுந்துள்ளன. மீனவ கிராமங்களில் 55 படகுகள் சேதமடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஏரிகள் விவரம்: புதுச்சேரி பிராந்தியத்தில் 84 ஏரிகள் உள்ளன. இதில், 80 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் 3 ஏரிகளில் 90 சதவீதமும், ஒரு ஏரியில் 80 சதவீதமும் தண்ணீா் நிரம்பியுள்ளது. சித்தேரி அணைக்கட்டு உள்ளிட்ட 26 படுகை அணைகள் நிரம்பியுள்ளன.