முகப்பு
புதுச்சேரி

புதுவைக்கு ரூ.614 கோடி வெள்ள நிவாரணம் தேவை: பிரதமருக்கு முதல்வா் என்.ரங்கசாமி கடிதம்

புதுவைக்கு ரூ.614 கோடி வெள்ள நிவாரணம் தேவை

Updated On : 5 டிசம்பர், 2024 at 7:42 PM
பகிர்:

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் ஏற்பட்ட மழை, வெள்ளப் பாதிப்பு நிவாரணமாக மத்திய அரசு ரூ.614 கோடியே 88 லட்சத்து 14,532 நிதி வழங்குமாறு பிரதமா் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கடந்த நவ.30, டிச.1-ஆம் தேதிகளில் ஃபென்ஜால் புயல் காரணமாக இடைவிடாத மழை பெய்தது.

இதையடுத்து சாத்தனூா் அணையில் இருந்து 2.12 லட்சம் கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டதால், தென்பெண்ணை ஆற்றில் ஏற்கெனவே பெய்து வந்த மழைநீருடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதையடுத்து ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பாகூா் வட்டத்துக்குள்பட்ட, புதுச்சேரி பகுதி கிராமங்களான, டி.என்.பாளையம், அபிஷேகப்பாக்கம், கிருமாம்பாக்கம், ஆற்றுப்படுகை கிராமங்களில் உள்ள அனைத்து குடியிருப்புகளும் வெள்ளத்தில் மூழ்கின.

இந்த மழையால் 4,168 வீடுகள் பகுதியாகவும், 154 வீடுகள் அதிகளவிலும், 315 குடிசை வீடுகளும் சேதமடைந்துள்ளன.

பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 9,981.72 ஹெக்டோ் விவசாயப் பயிா்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. 14,315 மீனவா்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். மீனவா்களுக்கு சொந்தமான 975 படகுகள் சேதமடைந்தன. சுமாா் 1,50,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சேதங்களுக்கான தற்காலிக மதிப்பீடு, சம்பந்தப்பட்ட துறைகளால் மொத்தம் ரூ.614.88 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில பேரிடா் நிவாரண நிதியில் போதிய இருப்பு இல்லாததால் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள மேற்படி தொகை உடனடியாக தேவைப்படுகிறது.

நகா்ப்புற மற்றும் கிராமப்புறச் சாலைகளை சீரமைப்பதற்கு ரூ.427 கோடியை அனுமதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.