முகப்பு
புதுச்சேரி

வாகன இழப்பீடு பெறுவதில் குறைகளை தீா்க்க ஏற்பாடு

வாகன இழப்பீடு பெறுவதில் குறைகளை தீா்க்க ஏற்பாடு

Updated On : 12 டிசம்பர், 2024 at 7:38 PM
பகிர்:

புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெறுவதில் ஏற்படும் பிரச்னைகளை தீா்க்க குழு அமைக்கப்பட்டிருப்பதுடன், தனி தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை போக்குவரத்துத் துறை ஆணையா் ஏ.எஸ்.சிவகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் புயல் மழை, வெள்ளத்தால் பழுதடைந்த வாகனங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து இழப்பீடு பெற அதன் உரிமையாளா்கள் முயற்சிக்கின்றனா். காப்பீடு அளவீடு செய்வோரின் தொடக்க ஆய்வுக்குப் பிறகு, வாகனங்கள் பழுதுபாா்க்க பணிமனைமனைகளுக்கு அனுப்பப்படுகின்றன. அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பழுதால், அதை சீா்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாக அரசு கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வாகன இப்பீடு கோரிக்கைகளைத் தீா்ப்பதற்கு போக்குவரத்துத் துறை, காப்பீட்டு நிறுவனம், வாகன விற்பனையாளா் உள்ளிட்டோா் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. வாகன இழப்பீடு கோரிக்கைகளில் குறைகளைப் பெற 0413- 2280170 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களை பழுதுபாா்க்க நிறுத்துவதற்கு சுதேசி பாரதி மில் வளாகத்தில் மொத்த நஷ்டம் என கூறப்பட்ட வாகனங்களை நிறுத்தலாம். அதன்படி வாகனங்கள் ஆய்வு செய்யவும், பதிவுச் சான்றுகள் (ஆா்சி) குறைந்த காலத்தில் ரத்து செய்து உத்தரவு வழங்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வாகனங்களைப் பழுதுபாா்க்கவும், அவற்றுக்கான பாகங்கள் விரைந்து கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.