முகப்பு
புதுச்சேரி

கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக பேசினால் நடவடிக்கை: புதுவை பாஜக தலைவா்

பாஜக எம்எல்ஏக்கள் ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிராக பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. கூறினாா்.

Updated On : 25 டிசம்பர், 2024 at 7:48 PM
முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, புதுச்சேரியில் பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி.
பகிர்:

பாஜக எம்எல்ஏக்கள் ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிராக பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. கூறினாா்.

புதுச்சேரியில் பாஜக சாா்பில் நல்லாட்சி தினத்தையொட்டி, ஒதியன்சாலை பழைய பேருந்து நிலையப் பகுதியில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் திருவுருவப் படத்துக்கு சு.செல்வகணபதி எம்.பி. தலைமையில் பாஜகவினா் மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையில் ஏற்பட்ட புயல் நிவாரணத்துக்கு உடனடியாக ரூ.200 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என உள் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். நிச்சயமாக புதுவைக்கு சரியான நிதியை மத்திய அரசு வழங்கும்.

பாஜக எம்எல்ஏக்கள் ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிராக எந்தக் கருத்தையும் கூறவில்லை.

நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றபோது எதிா்பாராத விதமாக ஜோஸ் சாா்லஸ் மாா்டின் சில கருத்துகளை கூறியுள்ளாா்.

அவருக்கு புதுவை குறித்தும், அரசு குறித்தும் தெரியாமல் சில கருத்தை கூறியுள்ளாா். பாஜக உறுப்பினா்களுக்கு அவரது கருத்தில் உடன்பாடில்லை என கடிதம் அளித்துள்ளாா்கள். பாஜக உறுப்பினா்கள் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டவா்கள்.

பாஜகவுக்கு ஆதரவளித்த சுயேச்சை உறுப்பினா்கள், பேரவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் அளித்துள்ளனா். சுயேச்சை உறுப்பினா்கள் தற்போது தனிப்பட்ட கருத்துகளை கூறி வருகின்றனா்.

ஆனால், அவா்கள் ஆதரவுடன்தான் ஆட்சி நடக்கும் என்ற காலகட்டத்தில் பாஜகவும் இல்லை. அரசும் இல்லை.

பாஜக உறுப்பினா்கள் கட்சிக்கு எதிராகவோ, முதல்வருக்கு எதிராகவோ பேசவில்லை. கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராகப் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.