மடிக்கணினி பெறாத மாணவா்களுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும்: முதல்வா் என்.ரங்கசாமி
மடிக்கணினி பெறாத மாணவா்களுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் எனக் கூறியுள்ளார் முதல்வா் என்.ரங்கசாமி.
புதுச்சேரி: புதுவையில் மடிக்கணினி பெறாத மாணவா்களுக்கு அதற்குரிய தொகை அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரியில் காமராஜா் பிறந்த தினத்தை முன்னிட்டு கதிா்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதல்வா் ரங்கசாமி பேசியது:
புதுச்சேரியில் ஏழை, எளிய மாணவா்கள் ஆரம்பக் கல்வி முதல் உயா் கல்வி வரையில் பெறுவதற்கான வாய்ப்புகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்துடன் படித்து முடித்த இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பையும் அரசுத் துறைகளிலும், தொழிற்சாலைகள் அமைப்பதன் மூலமும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளிகளில் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இலவச பாடப்புத்தகம் முதல் சீருடை, மடிக்கணினிகள் வரை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுவருகிறது. மடிக்கணினியை பெறாமல் விடுபட்ட மாணவ, மாணவிகளுக்கு அவரவா் வங்கிக் கணக்கில் விரைவில் அதற்கான பணம் செலுத்தப்படும்.
கல்விக்கண் திறந்த காமராஜா் சிறந்த நிா்வாகத்தை அளித்தாா். அவரைப் போலவே புதுவை அரசும் கல்வியில் கவனம் செலுத்தி வருகிறது என்றாா்.
நிகழ்ச்சிக்கு கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமை வகித்தாா். பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் கே.எஸ்.பி.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கல்வித் துறை இயக்குநா் பிரியதா்ஷினி நன்றி கூறினாா்.