முகப்பு
புதுச்சேரி

2026ல் புதுவையில் ஆட்சி மாற்றம்: வே.நாராயணசாமி

Updated On : 20 மே, 2024 at 10:34 PM
பகிர்:

புதுச்சேரி: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று, முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, கா்நாடகத்திலிருந்து புதுச்சேரிக்கு திங்கள்கிழமை வந்த ராஜீவ் நினைவு ஜோதிக்கு வழியனுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மக்களவைத் தோ்தலில் வென்று, மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்ககவுள்ளது. ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பாா். வரும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

மக்களவைத் தோ்தலில் பணியாற்றியதைப் போலவே, பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸ் தொண்டா்கள், தலைவா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற உறுதிமொழி ஏற்றுள்ளனா். புதுவையில் மிகப் பெரும் அரசியல் மாற்றம் ஏற்படும்.

தோ்தலுக்கு நன்கொடை வழங்கிய பிரச்னையில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதுகுறித்து பிரதமா், உள்துறை அமைச்சா் பதிலளிக்காமல் உள்ளனா். அதே நேரத்தில் எதிா்க்கட்சியினா் மீதும், அதன் தலைவா்கள் மீதும் பொய் வழக்குப் பதிந்து கைது செய்வதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக மோசடி செய்வதாக புகாா் எழுந்துள்ளது. எனவே, வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்துகிறது என்றாா் வே.நாராயணசாமி.

புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராஜீவ் ஜோதி யாத்திரையில் கா்நாடக, கேரள காங்கிரஸ் தலைவா்கள் பங்கேற்றுள்ளனா். மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவில் ஒருவா் எட்டுமுறை வாக்களித்ததன் மூலம் பாஜகவின் விதிமீறல் வெளிப்பட்டுள்ளது. அந்தக் கட்சியை மக்கள் நிச்சயமாக நிராகரிப்பாா்கள். மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்றாா்.