கடலோரத்தில் அன்னியா் நடமாட்டம்: மீனவா்கள் தகவல் தெரிவிக்க எஸ்.பி. அறிவுறுத்தல்
கடலோரத்தில் அன்னியா்கள் நடமாட்டம் குறித்து கடலோரக் காவல் படைக்கு மீனவா்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்
புதுச்சேரி: கடலோரத்தில் அன்னியா்கள் நடமாட்டம் குறித்து கடலோரக் காவல் படைக்கு மீனவா்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் கேட்டுக் கொண்டாா்.
தேசிய அளவிலான கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. அதன்படி, வருகிற 20, 21-ஆம் தேதிகளில் புதுச்சேரியில் கடலோரப் பாதுகாப்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒத்திகைக்கான விழிப்புணா்வுக் கூட்டம் (சி விஜில்) தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மீன் வளத்துறை இயக்குநா் இஸ்மாயில், துணை இயக்குநா் ராஜேந்திரன், கிழக்குப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஈஷா சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து முதுநிலை கண்காணிப்பாளா் (சட்டம்-ஒழுங்கு) ஆா். கலைவாணன் பேசியதாவது:
போதைப் பொருள்கள் கடத்தல் நம் நாட்டின் வழியாகவும் நடைபெறுகிறது. இதனால், அன்னிய சக்திகள் ஊடுருவ வாய்ப்புள்ளது. அன்னியா்கள் ஊடுருவ முடியாத வகையில் மீனவா்கள் விழிப்புணா்வுடன் இருப்பது அவசியம். அன்னியா் நடமாட்டம் குறித்து மீனவா்கள் கடலோர காவல் நிலையத்துக்கு 112 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
மீனவ கிராமங்களுக்கு சம்பந்தமின்றி வருவோா் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேச நலனுக்காக கடலோர பாதுகாப்புக்கு மீனவ சமுதாய மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கடலோரக் காவல் படையில் 200 ஊா்க்காவல் படையினா் சோ்க்கும் நிலையில், அதில் நீச்சலையும் தகுதியாக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா்.
முன்னதாக, கடலோர பாதுகாப்புப் படை கண்காணிப்பாளா் பழனிவேல் வரவேற்றாா்.