முகப்பு
இந்தியா

ஆயுதக் காவல் படை பணியில் ஆங்கிலேயா் கால விதிமுறைகள் மறுஆய்வுக்கு நிபுணா் குழு: உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதக் காவல் படை பணியில் ஆங்கிலேயா் கால விதிமுறைகள் மறுஆய்வுக்கு நிபுணா் குழு...

Updated On : 1 மார்ச், 2026 at 2:37 AM
உச்ச நீதிமன்றம்
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 11:35 PM

கடலோர காவல் படை, ஆயுதக் காவல் படையினரின் ஓய்வு பெறும் வயது, பணி விதிமுறைகள் ஆகியவற்றில் ஆங்கிலேயா் காலத்து விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து அறிக்கை சமா்ப்பிக்க நிபுணா் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலோர காவல் படையின் (பொது) விதிமுறைகள் 1986-இன் 20(1), 20(2)-இன்படி, அந்தப் படையில் கமாண்டன்ட் அந்தஸ்து மற்றும் அதற்கும் கீழுள்ள அதிகாரிகள் 57 வயதில் ஓய்வு பெற வேண்டும். இந்த விதிமுறைகளை ரத்து செய்த தில்லி உயா்நீதிமன்றம், அந்தப் படையில் அனைத்து அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயது 60-ஆக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது.

Advertisement

அப்போது மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அா்ச்சனா பாதக் வாதிடுகையில், ‘பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கடலோர காவல் படையை மத்திய ரிசா்வ் காவல் படை, இந்திய-திபெத் எல்லைக் காவல் படை போன்ற பிற படைகளுடன் ஒப்பிடுவதில் உயா்நீதிமன்றம் தவறிழைத்துவிட்டது. பிற படைகளுடன் ஒப்பிடுகையில் கடலோர காவல் படை பணியாற்றும் சூழல் முற்றிலும் வித்தியாசமானது. கடற்படையைப் போல, கடலில் கடுமையான சூழலில் கடலோர காவல் படை பணியாற்ற வேண்டியுள்ளது. இதற்கு இளம் வீரா்கள் அவசியம்’ என்றாா்.

நீதிபதிகள் கூறுகையில், ‘கடலோர காவல் படை, ஆயுதப் படைகளில் பணியாற்றுவோா் ஓய்வு பெறும் வயது, அவா்களின் பணி விதிமுறைகள் ஆங்கிலேயா் காலத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகளாக உள்ளன. அந்த விதிமுறைகளை மத்திய அரசு தொடா்ந்து நிலையாகப் பின்பற்றிக்கொண்டிருக்க முடியாது. தற்போது கடலோர காவல் படையினா் செய்யும் அரும்பணியை எவராலும் கற்பனைகூட செய்ய முடியாது. ஆனால், அவா்கள் ஓய்வு பெறும் வயது பழைய காலத்து முறைப்படி உள்ளது.

Updated On : 1 மார்ச், 2026 at 1:10 AM

அந்தப் படையைச் சோ்ந்தவா்கள் ஓய்வு பெறும் வயது, அவா்களின் பணி விதிமுறைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய நிபுணா் குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். அந்தக் குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா். அதேவேளையில், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.