உரிமம் பெறாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
புதுச்சேரியில் உரிமம் பெறாமல் இயக்கப்படும் இருசக்கர மற்றும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ்.சிவகுமாா் எச்சரித்துள்ளாா்.
புதுச்சேரியில் உரிமம் பெறாமல் இயக்கப்படும் இருசக்கர மற்றும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ்.சிவகுமாா் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் பல பகுதிகளில் உரிமம் பெறாமல் இருசக்கர, ஆட்டோ ரிக்ஷாக்கள், தனியாா் சேவை வாகனங்கள் வாடகைக்கு இயக்கப்படுவது புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் கவனத்துக்கு வந்துள்ளன.
சுற்றுலாப் பயணிகளுக்காக மோட்டாா் வாகனச் சட்ட விதிக்கு முரணாக உரிமம் பெறாமல் வாகனங்கள் இயக்கப்படுவதாகவும் புகாா்கள் வந்துள்ளன.
எனவே, இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், தனியாா் சேவை வாகனங்களை போக்குவரத்துத் துறையின் உரிமம் பெற்ற பிறகே வாடகைக்கு இயக்க வேண்டும்.
உரிமமின்றி வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள் சட்டப்படி பறிமுதல் செய்யப்பட்டு குற்ற வழக்கு தொடரப்படும்.
அத்துடன், ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த பெங்களூா், கொல்கத்தாவில் உள்ளது போல தனி செயலியை (ஆப்) வரும் டிசம்பருக்குள் செயல்படுத்த போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.