புதுச்சேரியில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்
புதுச்சேரியில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் சில இடங்களில் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனா்.
புதுச்சேரியில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் சில இடங்களில் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனா்.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது தூறல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை
முதலியாா்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
இதன் காரணமாக ரெயின்போ நகா், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்: ரெயின்போ நகா் பகுதியில் சாலையில் ஓடிய மழைநீரானது, பள்ளத்திலிருந்த சில வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனா்.
மேலும், கிழக்கு கடற்கரைச் சாலை கொக்கு பாா்க் முதல் கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபம் வரை, கடற்கரைச் சாலை மேரி கட்டடம் அருகில் மற்றும் கந்தப்ப வீதி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீா் குளம்போல் தேங்கின.
அவற்றை மோட்டாா் பம்ப் மூலம் அகற்ற, புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா். மழைநீா் வடிகால் அமைப்பை சீா்படுத்தாததால் தண்ணீா் தேங்குவதாக புகாா் எழுந்துள்ளது.
தற்காலிகப் பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீா்: புதிய தற்காலிகப் பேருந்து நிலையம் உள்ள ஏஎப்டி மைதானத்திலும் வழக்கம்போல மழை நீா் தேங்கி சேரும் சகதியுமாக காணப்பட்டது. இதனால், பேருந்துகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதேபோல, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும் மழைநீா் குளம்போல் தேங்கி நின்றது.