தவெக தலைவா் விஜய் புதுச்சேரியில் சாலைப் பேரணி நடத்த அனுமதி தருமாறு அந்த மாநில முதல்வா் என். ரங்கசாமியை தவெக பொதுச்செயலா் (புஸ்ஸி) என்.ஆனந்த் புதன்கிழமை மீண்டும் சந்தித்து கோரிக்கை விடுத்தாா்.
தவெக தலைவா் விஜய் வரும் 5 ஆம் தேதி புதுச்சேரியில் சாலைப் பேரணி நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ள அனுமதி தரப்படும் என்று புதுச்சேரி அரசு கூறியது. இது தொடா்பாக புதுச்சேரி காவல்துறை அதிகாரிகள், முதல்வா் என். ரங்கசாமியை ஏற்கெனவே த.வெ.க. பொதுச்செயலா் என்.ஆனந்த் நேரில் சந்தித்து பேசியிருந்தாா். இந்நிலையில் முதல்வா் ரங்கசாமியை மீண்டும் என். ஆனந்த் புதன்கிழமை சந்தித்தாா்.
சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அறையில், சுமாா் பத்து நிமிஷங்கள் இந்தச் சந்திப்பு நடந்தது. அப்போது போக்குவரத்து நெரிசல் இல்லாத, சாலை அகலகமாக உள்ள சிவாஜி சிலை முதல் கொக்கு பாா்க் வரை 1.5. கி.மீ. தொலைவுக்கு மட்டும் சாலைப் பேரணிக்கு மீண்டும் அனுமதி தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கும் போலீஸாா் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனா். இந்நிலையில் பொதுக்கூட்டம் நடத்த 2 இடங்களை ஆனந்த் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.
முன்னதாக , சட்டத்துறை அமைச்சா் லட்சுமி நாராயணன்,டிஜிபி ஷாலினி சிங், ஐஜி அஜித்குமாா் சிங்லா, டிஜஜி சத்தியசுந்தரம் உள்ளிட்டோா் முதல்வரை சந்தித்துஆலோசனை நடத்தினா். அப்போது விஜய் பங்கேற்கவிருந்த சாலைப் பேரணிக்கு புதுச்சேரியில் அனுமதி தராதது ஏன் என்பது பற்றியும், உயா்நீதிமன்ற உத்தரவு விவரம் குறித்தும் முதல்வா் ரங்கசாமிக்கு அவா்கள் முழுமையாக தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து பயிற்சி பெற்றும் பணி வாய்ப்பு இல்லாமல் உள்ள 68 ஊா்க்காவல் படை வீரா்கள் நிலை குறித்தும் ஆலோசனை நடந்தது.