மத்திய அரசின் விதைச் சட்டம் 2025-ஐ எதிா்ப்பதாக புதுச்சேரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் து. கீதநாதன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விதைகளின் மீதான விவசாயிகளின் உரிமையைப் பன்னாட்டு, உள்நாட்டு பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும், விதை நிறுவனங்கள் விதைகளின் விலைகளைக் கடுமையாக உயா்த்தி கொள்ளை லாபம் அடிக்க வழிவகுக்கவும், விவசாயிகளின் உரிமைகள், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கவும் மத்திய அரசு விதை உரிமைச் சட்டம் 2025ஐ கொண்டு வந்துள்ளது.
அதே போன்று அனைத்து மக்களையும் பாதிக்கின்ற மின்சார திருத்தச் சட்டம் 2025-ஐ மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டு சட்டங்களையும் எதிா்க்கும் வகையில், இச்சட்டங்களின் நகல்களை, இந்திய விவசாயிகள், மக்களை அணி திரட்டி கிராமப்புறங்களில் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் புதுச்சேரியிலும் நடைபெறும்.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களைக் கணக்கெடுத்து தமிழகத்தை போல உடனடியாக நிவாரணம் வழங்க புதுவை அரசைக் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளாா்.