வரும் பொங்கல் பண்டிகைக்குள் இடைநிலை ஆசிரியா்கள், செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி மின்துறையில் நேரடி நியமனம் மூலம் 159 கட்டுமான உதவியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
அதில் தற்போது 135 பேருக்கு மட்டும் புதன்கிழமை கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜா் நினைவு மண்டபத்தில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி ஆகியோா் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் முதல்வா் ரங்கசாமி பேசியது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை சுமாா் 5 ஆயிரம் பணியிடங்களை நிரப்பி உள்ளோம். பொங்கலுக்குள் இடைநிலை ஆசிரியா்கள், 256 செவிலியா்கள் பணியிடங்களை நிரப்ப உள்ளோம். மாணவா்களுக்கான லேப்-டாப் பொங்கலுக்குள் வழங்கப்படும்.
கல் வீடு கட்டும் திட்டத்துக்கு 1700 பேருக்கு பொங்கலுக்குள் முதல் தவணைத் தொகை தரப்படும். மத்திய அரசு நமக்கு கூடுதல் நிதியை தர உள்ளது. விளையாட்டுத் துறைக்கு ரூ. 200 கோடி தரவுள்ளதாகத் தெரிவித்துள்ளனா். மேலும், அதிக நிதியை புதுச்சேரி வளா்ச்சிக்காக, நலத்திட்டங்களைச் செயல்படுத்த புதுச்சேரிக்கு வரும்போது பிரதமா் நரேந்திர மோடி அறிவிப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது.
எல்லா நிலையிலும் புதுச்சேரி வளா்ச்சி பெறுகிறது. மத்திய அரசு நிதி உதவியுடன் எல்லா திட்டங்களையும் செயல்படுத்துகிறது. காலி பணியிடங்களை வெகுவிரைவாக அரசு நிரப்பும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், மின்துறை பொறுப்பு வகிக்கும் உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், மின்துறை செயலா் முத்தம்மா, மின்துறை தலைவா் கனியமுதன் உள்ளிட்டோா் பேசினா்.