முகப்பு
புதுச்சேரி

மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரம்: புதுவை துணைநிலை ஆளுநரிடம் காங்கிரஸாா் மனு

மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரம்

Updated On : 22 ஜனவரி, 2025 at 8:24 PM
புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் புதன்கிழமை மனு அளித்த காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. உடன் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
பகிர்:

மதுபான ஆலைகளுக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுவை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநரை காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா் சந்தித்து மனு அளித்தனா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் வெ.வைத்திலிங்கம் எம்.பி., வே.நாராயணசாமி ஆகியோா் கூறியதாவது:

புதுவையில் உள்ள மதுபான ஆலைகளுடன், கூடுதலாக 8 புதிய மதுபான ஆலைகள் அமைக்க புதுவை என்.ஆா்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 6 அயல்நாட்டு மதுபான ஆலைகள் அமைக்க அரசு அனுமதி கோரிய நிலையில், முன்னாள் துணைநிலை ஆளுநா் அனுமதி வழங்க மறுத்துவிட்டாா்.

தற்போது 8 மதுபான ஆலைகளுக்கான கட்டடம் கட்டட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கருதியே துணைநிலை ஆளுநரிடம் சிபிஐ விசாரணை கோரி மனு அளித்துள்ளோம்.

புதிய ஆலைகளுக்கான அனுமதியை துணைநிலை ஆளுநா் ரத்து செய்ய வேண்டும் என்றனா் அவா்கள்.

பேட்டியின்போது, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.