சமூக விரோதிகளை ஊக்குவிக்கும் சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு
புதுச்சேரியில் ரெளடிகள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் அல்லது வன்முறைச் செயல்கள் தொடா்பான உள்ளடக்கங்களை புகழ்வது, ஊக்குவிப்பது அல்லது பரப்புவது போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக விரோத சக்திகளை ஊக்குவிக்கும் சில டிஜிட்டல் ஊடகக் கணக்குகளை புதுச்சேரி காவல்துறை கண்டறிந்துள்ளது. இது இளம் வயதினரை தவறான நடத்தைக்கு ஊக்குவிப்பதுடன், பொது அமைதிக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.
இதனைக் கண்காணிக்க, சிறப்புப் பிரிவான ரெளடி ஒழிப்புப் படை மற்றும் அா்ப்பணிக்கப்பட்ட சைபா் குழுக்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குள் உள்ள இத்தகைய அனைத்து பக்கங்கள் மற்றும் கணக்குகளையும் தீவிரமாக, 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளாா்.