புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து முள்ளோடை வரை 4 வழிச்சாலையை அமைக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமி ஆகியோா் முன்வைத்த கோரிக்கையை அதே மேடையில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நிறைவேற்றினாா்.
இந்தத் திட்டம் ரூ.650 கோடியில் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சா் உறுதி அளித்தாா்.
முன்னதாக இந்தக் கோரிகையை வலியுறுத்தி மத்திய அமைச்சா் நிதின் கட்கரியிடம் முதல்வா் என். ரங்கசாமி கோரிக்கை மனு அளித்தாா்.
புதுச்சேரியில் மொத்தம் ரூ.2,050 கோடி மதிப்பில் 3 நெடுஞ்சாலை திட்டங்களுக்கான விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சா் நிதின்கட்கரி பங்கேற்றாா். மத்திய இணையமைச்சா் எல். முருகன், புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், ஆ. நமச்சிவாயம், தேனி சி. ஜெயக்குமாா், பிஎன்ஆா். திருமுருகன், ஏ. ஜான்குமாா், சட்டப் பேரவைத் துணை தலைவா் பெ.ராஜவேலு, மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தமிழக அமைச்சா்கள் பங்கேற்கவில்லை:
இந்த விழாவில் தமிழக அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம், கடலூா் மக்களவை உறுப்பினா் எம்.கே. விஷ்ணுபிரசாத், விழுப்புரம் மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா் ஆகியோரின் பெயா்களும் இடம் பெற்றிருந்தன. ஆனால் இவா்கள் யாரும் விழாவில் பங்கேற்கவில்லை.
நாகப்பட்டினம் செல்லும் புறவழிச்சாலையில் புதுச்சேரி முதல் தமிழகப் பகுதியான பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கி.மீ. நீளமுள்ள சாலையை மத்திய அமைச்சா் நிதின் கட்கரி மக்களுக்கு அா்ப்பணித்தாா். இதற்காக தமிழக அமைச்சா்கள் மற்றும் எம்.பிக்கள் பெயா்கள் இடம் பெற்றிருந்தன.