புதுச்சேரியில் ஏப். 5-இல் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) புதுச்சேரியில் அதிமுக, கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.
இதுகுறித்து புதுச்சேரி மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி அண்ணா திடலில் 5-ஆம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பேசுகிறாா்.
இக் கூட்டத்தில் 20 ஆயிரம் போ் பங்கேற்பா். புதுச்சேரியில் 30 தொகுதிகளில் கூட கூட்டணியை அமைக்க முடியாத திமுக, தமிழகத்தில் மிக பெரிய தோல்வியைத் தழுவும். புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா்.