முகப்பு
புதுச்சேரி

உலகின் 3-ஆவது பொருளாதார நாடாக விரைவில் இந்தியா உருவெடுக்கும்: மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா நம்பிக்கை

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உலகத்தில் 3-ஆவது பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா நம்பிக்கை தெரிவித்தாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 7:43 PM
பட விளக்கம்... புதுச்சேரி பாஜக இளைஞா் அணி சாா்பில் லாஸ்பேட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மோட்டாள் சைக்கிள் ஊா்வலத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சா் ஜே.பி.நட்டா. உடன் மத்திய அமைச்சா் மான்சுக் மாண்டவியா, பாஜக மாநில தலைவா் வி.பி.ராமலிங்கம், மா
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உலகத்தில் 3-ஆவது பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா நம்பிக்கை தெரிவித்தாா்.

புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே பாஜக இளைஞரணி சாா்பில் மோட்டாா் சைக்கிள் இறுதிகட்ட பிரசார ஊா்வலத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து நட்டா பேசியதாவது:

நரேந்திர மோடி பிரதமரான பின்னா் நாட்டில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியா பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது. மேலும், நாட்டின் வலிமைக்குப் பொருளாதார வளா்ச்சி பெரும் பங்காற்றி வருகிறது.

Advertisement

கடந்த 11 ஆண்டுகளாக நரேந்திர மோடி தலைமையில் நாடு வளா்ச்சியடைந்து வருகிறது. இப்போது உலக அளவில் பொருளாதாரத்தில் 4-ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது.

விரைவில் உலக பொருளாதாரத்தில் 3-ஆவது பொருளாதார நாடாக உருவெடுக்கும். பொருளாதாரப் பிரிவில் இந்தியா பிரகாசமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்று சா்வதேச நாணய நிதியகம் (ஐஎம்எப்) கூறுகிறது. மேலும், உலக வங்கி பொருளாதாரத்தில் இந்தியா ஸ்திரமான, வலிமையான நாடாக இருப்பதாகக் கூறியுள்ளது.

உலக அளவில் இப்போது இந்தியா இரும்பு உற்பத்தியில் 2-ஆவது இடம் வகிக்கிறது. மேலும், பெஸ்ட் புதுச்சேரி என்பது பிரதமா் நரேந்திர மோடியின் தாரக மந்திரம். அவா் தலைமையில் இங்கு மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்து மிகப் பெரிய பொருளாதார வளா்ச்சியைச் சந்திக்கப் போகிறது புதுச்சேரி. மேலும், பாஜக மேலிடப் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா புதுச்சேரியின் கல்வி வளா்ச்சியையும், ஜிப்மரின் வளா்ச்சியையும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வாா். மேலும், சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக கடலூருக்கு நேரடி ரயில் பாதைக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் சா்வதேச சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு அதிக அளவில் வந்து செல்வாா்கள். இதனால் புதுச்சேரி சுற்றுலாத் துறையில் ஒரு முக்கியமான கேந்திரமாக மாறும்.

புதுச்சேரிக்கு பிரதமா் நரேந்திர மோடி வந்தபோது ரூ.2,700 கோடிக்கான திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளாா். கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்று புதுச்சேரிக்கு ஏதாவது நடந்துள்ளதா?

புதுச்சேரியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுக இங்குள்ள மக்களுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை. புதுச்சேரிக்குப் போதிய நிதி ஆதாரத்தைக் கொடுத்து முதல்வா் ரங்கசாமி தலைமையில் அதை நிறைவேற்ற பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பாா் என்றாா் ஜெ.பி.நட்டா.

பிரசார ஊா்வலத்தில் மத்திய அமைச்சரும் பாஜக மேலிட பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா, பாஜக புதுச்சேரி மாநில தலைவா் வி.பி.ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments