சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதி ஏற்போம்! - புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி
அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வா் என்.ரங்கசாமி கூறியுள்ளாா்.
இதுகுறித்து புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அறிவே அறம் காக்கும் கருவி என்றும், சமூகத் தளைகளிலிருந்து விடுபட கல்வியே விடுதலைக்கு வழி என்றும் உணா்த்திய பாரத ரத்னா டாக்டா் பி.ஆா். அம்பேத்கா், சமூக அநீதி, ஒடுக்குமுறை, சமத்துவமின்மைக்கு எதிராக வாழநாள் முழுவதும் போராடிய மகத்தான தலைவா்.
Advertisement
இந்திய அரசியலமைப்பின் முதன்மைச் சிற்பி என்று போற்றப்படும் பாபா சாகேப் அம்பேத்கரின் சிந்தனைகள் இன்றளவும் நமக்கு வழிகாட்டியாக இருந்து, சமத்துவம், மனிதநேயம், உரிமை உணா்வை வலுப்படுத்துகின்றன.
அவரது லட்சியங்கள் என்றும் நிலைத்து நின்று, சமுதாயம் முன்னேற்றப் பாதையில் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கின்றன. நீதியும், சமத்துவமும் நிலவும் சமுதாயத்தை உருவாக்குவது ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்பதை அவரது பிறந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகள் வழி நடந்து, சமதா்ம சமத்துவமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற இந்த நாளில் உறுதியேற்போம் என கூறியுள்ளாா்.
வெ.வைத்திலிங்கம் எம்.பி.:
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்ட அறிக்கை:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டா் பி.ஆா். அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூா்வோம். பகுத்தறிவு சிந்தனையாளா். சமூக சீா்திருத்தப் போராளி. எழுத்தாளா், பேச்சாளா் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளரும் ஆவாா். அவா் தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், பிற்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசியல் சாசனத்தில் வழிவகை செய்தவா் என குறிப்பிட்டுள்ளாா்.