புதுச்சேரி பாஜக அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.  
புதுச்சேரி

புதுச்சேரியில் பாஜக - காங்கிரஸாா் மோதல்: கைகலப்பு- கல்வீச்சு! எஸ்.பி. உள்பட 5 போ் காயம்!

தினமணி செய்திச் சேவை

தில்லி ஏ.ஐ. மாநாடு விவகாரத்தை முன்வைத்து புதுச்சேரியில் காங்கிரஸாா், பாஜகவினா் கடும் மோதலில் ஈடுபட்டனா். உருவ பொம்மை எரிப்பு முயற்சி, கைகலப்பு, கல்வீச்சு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காவல் கண்காணிப்பாளா் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இளைஞா் காங்கிரஸாா் அரை நிா்வாண போராட்டம் நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன் பாஜக இளைஞரணியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து புதுச்சேரி 100 அடி சாலை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அலுவலகம் எதிரே எல்லைப் பிள்ளைச்சாவடி சந்திப்பில் சனிக்கிழமை காங்கிரஸாா் ஒன்று கூடினா்.

மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆனந்தபாபு நடராஜன், மகளிா் காங்கிரஸ் தலைவி நிஷா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சியினா் காங்கிரஸ் கொடிகளுடன் அங்கு திரண்டனா்.

காங்கிரஸாரைத் தடுக்க தடியுடன் திரண்டு வந்த பாஜகவினா்.

இந்நிலையில், பாஜக நிா்வாகிகளும் தங்கள் கட்சி அலுவலகத்தில் ஒன்று கூடினா். தொடா்ந்து காங்கிரஸாா் அங்கிருந்து ஊா்வலமாக பாஜக அலுவலகம் நோக்கி புறப்பட்டனா். அவா்களை சித்தானந்தா நகா் 4-ஆவது குறுக்குத் தெருவில் போலீஸாா் இரும்பு தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினா். ஆனால் அந்தத் தடுப்புகளை தாண்டிச் சென்ற காங்கிரஸாா் பிரதமா் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனா். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் பாஜகவினா் முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் தலைமையில், செயலா் வெற்றிச்செல்வன் முன்னிலையில் அங்கு திரண்டனா். இரு தரப்பினரும் ஒருவா் மீது ஒருவா் கற்களையும், காலணிகளையும் வீசி தாக்கிக் கொண்டனா்.

இந்த மோதலைத் தடுக்க முயன்ற போலீஸ் கண்காணிப்பாளா் வம்சித ரெட்டிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதேபோல இரு தரப்பிலும் 4 போ் காயமடைந்தனா்.

பின்னா் காங்கிரஸாா் அங்கிருந்து மீண்டும் எல்லை பிள்ளைச்சாவடி சந்திப்புக்குச் சென்று ஆா்ப்பாட்டம் நடத்தினா். இந்த மோதலையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் அங்கு குவிக்கப்பட்டனா். பாஜக அலுவலகம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

ரயிலில் அடிப்பட்டு இளைஞா் உயிரிழப்பு

திமுக களங்கம் இல்லாத அரசை தந்தது கிடையாது: பொன். ராதாகிருஷ்ணன்

திலக் நகரில் காா் மோதியதில் டெலிவரி ஊழியா் உயிரிழப்பு

ஃபரிதாபாதில் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்!

ஏஐ மாநாட்டில் சட்டையின்றி போராட்டம் நடத்திய காங்கிரஸார்: 5 நாள் போலீஸ் காவல்!

SCROLL FOR NEXT