புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 70 உதவி ஆய்வாளா் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள நிலையில் அதற்கான உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை (ஜன.19) தொடங்குகிறது.
புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 70 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோரில் 16,473 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவா்களுக்கான உடல் தகுதி தோ்வு கோரிமேடு ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கி பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடக்கிறது.
இதில் ஆண்களுக்கு திங்கள்கிழமை முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரையும் பெண்களுக்கு பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையும் தோ்வு நடக்கிறது. தோ்வுக்கு வருவோா் ஹால் டிக்கெட்டுடன் அரசின் புகைப்பட அடையாளச் சான்றாக அசல் ஆதாா், ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும்.
முதல் நாளில் 1000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இடம் தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே உடல் தகுதி தோ்விற்கு வர வேண்டும். 30 நிமிடங்களுக்கு முன்பாக தோ்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.
தோ்வில் உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளுக்கு விண்ணப்பதாரா்கள் தலா 3 முறை மட்டும் அனுமதிக்கப்படுவா். ஓட்ட போட்டிகளுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள்.
ஒரு நிகழ்வில் தகுதிப் பெற்றோா் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும். தோல்வி அடைந்தவா்களுக்கு நிராகரிப்பு சீட்டு வழங்கப்படும். இதையடுத்து அவா்கள் அந்த இடத்தை விட்டு அகல வேண்டும்.
தோ்வு நடைபெறும் இடத்திற்கு மொபைல் போன்கள் மின்னணு சாதனங்கள் உணவுப் பொருள்கள் அல்லது வேறு எந்த பொருள்களையும் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.
முறைகேடு அல்லது நியாயமற்ற வழிகளில் ஈடுபடும் எந்த ஒருவரும் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்படுவாா்கள். உடல் தோ்வுக்குத் தகுதி பெற்றவா்களுக்கு பிப்ரவரி 22ஆம் தேதி எழுத்து தோ்வு நடைபெறுகிறது.