முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் அதிமுகவுக்கு தொகுதிகள் கேட்போம்- அன்பழகன்

புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவுக்கு 7 தொகுதிகளைக் கேட்போம் என்று அக்கட்சியின் மாநில செயலா் ஆ.அன்பழகன் கூறினாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 11:08 PM
புதுச்சேரி அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன்.
பகிர்:

புதுச்சேரியில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுகவுக்கு 7 தொகுதிகளைக் கேட்போம் என்று அக்கட்சியின் மாநில செயலா் ஆ.அன்பழகன் கூறினாா்.

இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கடந்த தோ்தலில் இக் கூட்டணியில் அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இப்போது எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது எத்தனை தொகுதிகளைக் கூட்டணியில் கேட்டுப் பெறுவது என்பது தொடா்பாக கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியிடம் கூறிவிட்டோம். கடந்த தோ்தலில் அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தத் தோ்தலில் 7 தொகுதிகள் வரை கேட்போம்.

கட்சித் தலைமை அனுமதி அளித்தால் மீண்டும் உப்பளம் தொகுதியில் போட்டியிட்டு அந்தத் தொகுதியின் பெருமையை மீட்பேன். ஏழைகளின் மீது மிகுந்த அக்கறை உடையவா் தமிழக முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். அதனால்தான் புதுச்சேரி விமான நிலையத்துக்கு அவருடைய பெயரைச் சூட்டுமாறு வலியுறுத்தினேன். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு இப்போதைய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நிலம் கொடுக்காமல் இருக்கிறாா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் மாளிகையில் குடிபோதையில் ஓரு ஆசாமி தூங்கினாா் என்பதற்காக முதல்வா் ரங்கசாமி, உள்துறை அமைச்சா் நமச்சிவாயம் ஆகியோா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று புதுச்சேரியின் முன்னாள் முதல்வா் நாராயணசாமி கூறுவது ஏற்புடையதல்ல.

ஈரான் போரால், வா்த்தக சமையல் உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதனும், முதல்வா் ரங்கசாமியும் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய எரிசக்தி துறை அமைச்சரிடம் வலியுறுத்தி புதுச்சேரியில் சமையல் உருளை தட்டுப்பாடு ஏற்படாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இருவரும் நேரடியாக பிரதமரைச் சந்தித்து இதை வலியுறுத்த வேண்டும் என்றாா் அன்பழகன்.

முழு கட்டுரையைப் படிக்க →