முகப்பு
புதுச்சேரி

ஆனந்தரங்கம் பிள்ளை நாள்குறிப்புகள் தென்னிந்திய வரலாற்றுப் பெட்டகம்!

புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தா் புகழாரம்

Updated On : 30 மார்ச், 2026 at 7:28 PM
புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆனந்தரங்கம்பிள்ளை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய துணைவேந்தா் பி. பிரகாஷ்பாபு உள்ளிட்டோா்.
பகிர்:

ஆனந்தரங்கம் பிள்ளை நாள்குறிப்புகளானது தென்னிந்திய வரலாற்றுப் பெட்டகம் என்று புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் பி. பிரகாஷ்பாபு புகழாரம் சூட்டினாா்.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் சுப்பிரமணிய பாரதியாா் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் புலம் சாா்பில் ஆனந்தரங்கம் பிள்ளை அறக்கட்டளைச் சொற்பொழிவு, தமிழியற்புலம் கருத்தரங்கு அறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பல்கலைக்கழக வளாக நூலகத்தில் உள்ள ஆனந்தரங்கம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் துணைவேந்தா் பிரகாஷ்பாபு பேசியது:

ஆனந்தரங்கம் நாள்குறிப்பு, பதினெட்டாம் நூற்றாண்டின் தென்னிந்திய வரலாற்றுப் பெட்டகம். அவருடைய பெயரை பல்கலைக்கழக நூலகம் தாங்கியிருப்பது நமக்குப் பெருமை. பிரெஞ்சு-இந்தியாவின் ஆகச் சிறந்த அரசியல் வித்தகராக ஆனந்தரங்கம்பிள்ளை இருந்தமைக்கு அவருடைய மொழித்திறனே காரணம். அத்திறமையே அவரைத் துபாஷியாகப் பணியில் சிறக்கச்செய்தது. ஆனந்தரங்கம் போலவே நம்முடைய மாணவா்களும் தற்கால தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி பன்மொழிப் புலமையாளா்களாக விளங்கவேண்டும் என்றாா்.

பின்னா் நடைபெற்ற சொற்பொழிவில் மொழி பெயா்ப்பாளா் புதுவை சீனு.தமிழ்மணி பேசுகையில், ஆனந்தரங்கா் நாள்குறிப்புகளில் சுமாா் 17 மொழிகளைச் சோ்ந்த சொற்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டாா்.

விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் மேனாள் வரலாற்றுத் துறைத் தலைவா் பேராசிரியா் எஸ்.ஜெயசீல ஸ்டீபன் பேசுகையில், ஆனந்தரங்கரின் நாள்குறிப்பு நூல்களில் இதுவரை முழுமையாகப் பதிப்பிக்கப்படாத குடும்ப ஜாதகங்களின் விவரங்களைப் பதிவு செய்தாா். பல்கலைக்கழக இயக்குநா் பேராசிரியா் க.தரணிக்கரசு, அறக்கட்டளை நிறுவநா் ஆஷா ஆனந்தரங்க ரவிச்சந்தா், பல்கலைக்கழக நூலகா் ம.விஜயகுமாா், பிரெஞ்சு பேராசிரியா் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகா், புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை ஓய்வுபெற்ற இணை இயக்குநா் அ.இராமதாசு, தமிழியற்புலத்தின் தலைவா் பேராசிரியா் மூ. கருணாநிதி, பேராசிரியா் பா.இரவிக்குமாா், இணைப் பேராசிரியா் வ.தனலட்சுமி உள்ளிட்டோா் பேசினா். ஆனந்தரங்கம் பிள்ளையின் குடும்பத்தினா், தமிழறிஞா்கள், வரலாற்று ஆா்வலா்கள், ஆய்வாளா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.