சங்கராபுரம் அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீ‘ஸார் விசாரித்து வருகின்றனர்.
அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(35). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மீனா(26). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. சென்ற திங்கள்கிழமை அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
மீனாவை ராஜா திட்டிவிட்டு பழையசிறுவங்கூர் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு பலாப்பழம் கொடுக்க சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மீனா மயங்கி கிடந்தார். அவர் அரளி விதையை (விஷம்) அரைத்து குடித்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மீனா சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், அதன்பின் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை மீனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கராபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.