வானூர் அருகே இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.
வானூர் அருகே நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் தமிழ் ஒளி(32). விவசாயி. இவரது மனைவி நந்தினி(26). இத்தம்பதிக்கு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் நந்தினி மர்மமான முறையில், உடலில் சிறு காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து வந்த நந்தினியின் உறவினர்கள், அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் நந்தினி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
நந்தினி இறந்ததால், அந்த பகுதியில் ஏராளமான உறவினர்கள் குவிந்தனர். மேலும், தகராறு ஏற்படும் சூழல் நிலவியது. இதையடுத்து, வானூர் காவல் ஆய்வாளர் திருமணி நிகழ்விடத்துக்கு வந்த அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். நந்தினி உயிரிழப்புத் தொடர்பாக, அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் வானூர் போலீஸார் மர்மச் சாவு என வழக்குப் பதிந்து கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார்.