விழுப்புரம் மருதூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்காக புதுப்பிக்கப்பட்ட கோயிலில் கும்பாபிஷேக விழா (மே 16) செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், கணபதிஹோமம், கும்பாபிஷேக மகா சங்கல்பமும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு யாகசாலை பிரதிஷ்டை செய்து, முதல் கால யாக பூஜையும் இரவு 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடைபெற்றன.
தொடர்ந்து புதன்கிழமை காலை 7.30 மணிக்கு கலச பூஜைகளும், மூன்றாம் கால யாக பூஜைகளும், அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடைபெற்றன.
வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு கலச பூஜையும், நான்காம் கால யாக பூஜையும், ஹோமங்களும் நடைபெற்றன. காலை 7.30 மணிக்கு புனித நீர் கொண்டுவரப்பட்டு, வரசித்தி விநாயகர், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், பத்மாவதி தாயார் சமேத வெங்கடேச பெருமாள், தஷ்ணாமூர்த்தி, பக்த ஆஞ்சநேயர், துர்க்கை அம்மன், வள்ளி தேவாணை சமேத முருகர், நவக்கிரகங்கள் சன்னதிகளில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வழிபட்டனர்.