திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் வாசகர் வட்ட ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வாசகர் வட்டத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார். அருட்கவிஞர் அருள்நாதன் தங்கராசு, ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குநர் அ.சிவகுருநாதன், விளந்தை நூலக வாசகர் வட்டத் தலைவர் அ.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார்.
கூட்டத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள், நல்லாசிரியர் கு.நெடுஞ்செழியன், முதுகலை ஆசிரியர்கள் ஜானகிராமன், எம்.ரவி, வானவில் கல்வி அறக்கட்டளைத் தலைவர் வே.ஜெயக்குமார் ஆகியோர் ஆலோசனைகள் வழங்கினர். வரும் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் 50-வது தேசிய நூலக வார விழாவை, திருக்கோவிலூர், கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட நூலகங்களை உள்ளடக்கி, வரும் 18-ஆம் தேதி இந்நூலகத்தில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கதை, கவிதை , பாடல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்குவது, அனைத்து நூலகங்களிலும் அவசியம் 50 உறுப்பினர்கள், 5 புரவலர்கள் சேர்ப்பது, நூலகங்களுக்குத் தேவையான தளவாடப் பொருள்களை நன்கொடையாக கேட்டுப் பெறுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. வழக்குரைஞர் மு.பாண்டு, கலை ஆசிரியர் ஆதிமாயன், கவிஞர் தேசப்பிரியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை முகையூர் ஊர்ப்புற நூலகர் வே.ஆனந்தி, பணியாளர்கள் சு.சம்பத், இரா.கோகிலா, ச.தேவி, ச.சரண்யா ஆகியோர் செய்திருந்தனர். நூலகர் மு.சாந்தி நன்றி கூறினார்.