சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுவர், சிறுமியர்
விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுவர், சிறுமியர் போக்குவரத்து விதிகள் குறித்த பதாகைகளை ஏந்தி வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுவர், சிறுமியர் போக்குவரத்து விதிகள் குறித்த பதாகைகளை ஏந்தி வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
29-ஆவது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, விழுப்புரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை மாலை, விபத்தில்லா தேசம் என்ற அமைப்புடன் இணைந்து, போக்குவரத்து போலீஸார் நான்கு முனைச் சந்திப்பு பகுதியில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
போக்குவரத்து உதவி ஆய்வாளர் வசந்த் கலந்து கொண்டு தலைக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை அழைத்து, தலைக்கவசம் அணியாமல் சென்றால், ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்தார்.
சிக்னலின் நான்கு புறங்களிலும் சிறுவர், சிறுமிகள் கழுத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதைகளை கைகளில் பிடித்துக் கொண்டு நின்றனர். தலைக்கசவம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும், சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்ட வேண்டும். செல்லிடப்பேசி பேசியபடி வாகனம் ஓட்டக்கூடாது போன்ற விழிப்புணர்வு கருத்துகளை வலியுறுத்தினர்.
மேலும், வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். இதேபோல கார், பைக், லாரி உள்ளிட்ட வாகனங்களில் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டினர். இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் முருகன், செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.