திருக்கோவிலூரில் கூட்டுறவு வங்கி மேலாளர் செவ்வாய்க்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
திருக்கோவிலூர் நகர கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணிபுரியும் தஜ்மல்உசேன், கள்ளக்குறிச்சி வங்கிக் கிளை துணை மேலாளராகப் பணிபுரியும் கண்ணன் ஆகியோர் வருங்கால பொது வைப்பு நிதியில் இருந்து கடனுதவி கேட்டு விண்ணப்பித்தனர்.
இவர்களது விண்ணப்பங்களை பொது மேலாளர் (பொ) பிரபாகரன் கிழித்தெறிந்து, கடனுதவி வழங்காமல் 2 மாதங்களுக்கும் மேலாக அவமதிப்பு செய்து வந்தாராம்.
இதுபற்றி, கடந்த திங்கள்கிழமை வங்கியில் நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கேள்வி எழுந்தபோது, ஊழியர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களிடம் பிரபாகரன் வரம்பு மீறி நடந்துகொண்டாராம். மேலும், கூட்டத்தில் கேள்வி எழ காரணமாக இருந்ததாக, வங்கித் துணைத் தலைவர் ஆதம்.சபியை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதையடுத்து ஊழியர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களிடம் வரம்பு மீறி நடந்து கொண்ட காரணத்துக்காக, பிரபாகரனை பணி இடைநீக்கம் செய்து, வங்கி நிர்வாக இயக்குநர் பால்ராஜ் வில்லியம்ஸ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.