மேல்மலையனூர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.41 லட்சம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 41 லட்சம் செலுத்தியிருந்தனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 41 லட்சம் செலுத்தியிருந்தனர்.
செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்களம்மன் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்குகிறது. இந்தக் கோயிலில் தினம்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். மேலும், மாதம்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர். வேண்டுதல் நிறைவு பெற்றவர்களும் காணிக்கையை செலுத்தி வருவது வழக்கம்.
இந்த நிலையில் பங்குனி மாத உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை கோயில் வளாகத்தில் எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் ரூ. 41லட்சத்து 87 ஆயிரத்து 135 மற்றும் தங்கம் 252 கிராம், வெள்ளி 705 கிராம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
காணிக்கை எண்ணும் பணியின்போது, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர்கள் ஏ.ஆர்.பிரகாஷ், ஜோதி, மேலாளர் மணி மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர், அறங்காவலர்கள் உடனிருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸார் மேற்கொண்டிருந்தனர்.