தனியார் உணவகத்தில் தீ விபத்து
விழுப்புரத்தில் உள்ள தனியார் உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் பொருள் சேதம் தவிர்க்கப்பட்டது.
விழுப்புரத்தில் உள்ள தனியார் உணவகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் பொருள் சேதம் தவிர்க்கப்பட்டது.
விழுப்புரம் நகரில் திருச்சி சாலையில் பிரபல தனியார் உணவகம் இயங்கி வருகிறது. இங்கு எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை உணவகத்தின் சமையல் அறை பகுதியில் இருந்து புகை கிளம்பியது. சற்று நேரத்தில் சமையல் அறை புகைபோக்கியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால், புகைபோக்கி இரண்டு தளங்களுக்கு மேல் செல்வதால் தீயை அணைக்க முடியவில்லை. மேலும், புகைபோக்கியின் உள்ளே தீ எரிந்து கொண்டிருந்ததால் வெளிப்புறம் கரும்புகை அதிகளவில் வெளியேறியது.
இதுகுறித்து, விழுப்புரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயசங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனால், பெரும் பொருள் சேதம் தவிர்க்கப்பட்டது. விழுப்புரம் நகர போலீஸார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். கடந்த ஓராண்டுக்கு முன்னர் இதேபோல, இந்த உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போதும் புகை போக்கி தீப் பற்றி எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.