வேலைவாய்ப்பு முகாம்: 400 பேருக்கு பணி ஆணை
சங்கராபுரத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 400 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
சங்கராபுரத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 400 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட பன்னாட்டு அரிமா சங்கங்கள், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த வேலைவாய்ப்பு முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.
முகாமில் விற்பனையாளர், விற்பனைப் பிரதிநிதி, கண்காணிப்பாளர், மேலாளர், கணினி பயிற்சியாளர், கணக்காளர், காசாளர், தட்டச்சர், மெக்கானிக், இரவுக் காவலர் மற்றும் ஆசிரியர்கள் போன்ற பட்டயம், பட்டப்படிப்பு மற்றும் பள்ளிப் படிப்பு, பி.எட் முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்து வித கல்வித் தகுதிக்கும் தனியார் நிறுவனங்கள் ஆள்களை தேர்வு செய்தனர்.
மொத்தம் 1, 212 பேர் பங்கேற்றதில், 400 பேர் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணி, விழுப்புரம் இ.எஸ். கல்விக் குழுமத் தலைவர் சாமிக்கண்ணு, விரியூர் இமாகுலேட் பெண்கள் கலைக் கல்லூரி முதல்வர் பாத்திமா ஆகியோர் பங்கேற்றனர். முகாமுக்கான ஏற்பாடுகளை அரிமா மாவட்டத் தலைவர் வ.விஜயகுமார், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்றத் தலைவர் பிரகாசம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.