அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி திருவிழா 11-ஆம் நாளான சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.
அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நவராத்திரி கொலு மண்டபத்தில் திரு ஊஞ்சலில் அமர்த்தி ஊஞ்சல் சேவை நடைபெற்றது. லாலி சௌடாம்பா லாலி என்ற லாலி பாடலும், ஸ்ரீலீலா கிரிபலா என்ற எச்சரிக்கை பாடலும் இசையுடன் குழுவாகப் பாடப்பட்டது. இதனை தொடர்ந்து, கொலு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீசாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய அறக்கட்டளை, பௌர்ணமி அமாவாசைக் குழுவினர் செய்திருந்தனர்.
பகவதி அம்மன் பீடத்தில்: உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை பகவதி அம்மன் பீடத்தில் நவராத்திரி நிறைவு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பகவதி பீட குருஜி பகவதி சுவாமிகள் தலைமையில் அம்மனுக்கு தினமும் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
நவராத்திரி விழா நாள்களில் உலக மக்கள் நலன் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், கல்வி ஞானம் குழந்தைகளுக்கு கிடைக்க வலியுறுத்தியும் சிறப்பு யாகம் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட மக்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.