ஏரியில் மணல் சரிந்து தொழிலாளி சாவு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரியில் மணல் அள்ளிய போது மணல் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரியில் மணல் அள்ளிய போது மணல் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி வட்டம், கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் அய்யனார் (52). இவரும், அதே ஊரைச் சேர்ந்த மேலும் 2 பேரும், செஞ்சி அருகேயுள்ள கஞ்சனூர் ஏரியில் சுரங்கம் போன்று உள்ள மிகப் பெரிய பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணல் அள்ளும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பள்ளத்தின் ஒரு பகுதியிலிருந்து அய்யனார் மீது மணல் சரிந்தது. மேலும், மழை பெய்ததால் ஈரமாக இருந்த பெரிய மணல் திட்டும் அவர் மீது சரிந்தது. இதில் சிக்கிய அவர் உயிரிழந்தார். அவருடன் இருந்த மற்ற இருவரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர். தகவலறிந்த கஞ்சனூர் போலீஸார், அய்யனாரின் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
கிராம மக்கள் சாலை மறியல்: இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விழுப்புரம்-செஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் விக்கிரவாண்டி வருவாய் அலுலர்கள் மற்றும் கஞ்சனூர் காவல் நிலைய அதிகாரிகள், சட்டவிரோதமாக இதுபோன்று மணல் அள்ளுவதைத் தடுத்து நிறுத்தாமல் அதற்கு துணை போகின்றனர். எனவே, இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன என்று குற்றஞ்சாட்டினர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் செஞ்சி டிஎஸ்பி ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொது மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், கஞ்சனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தர்மலிங்கத்தை விழுப்புரம் ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.