விக்கிரவாண்டி அருகே பலாத்கார முயற்சியில் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் சாவு
விக்கிரவாண்டி அருகே பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு பேர் தாக்கியதில் காயமடைந்த பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
விக்கிரவாண்டி அருகே பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு பேர் தாக்கியதில் காயமடைந்த பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள மூங்கில்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண் குடும்பத்துடன், மும்பையில் வசித்து வந்தார்.
மும்பையிலிருந்து கடந்த 25-ஆம் தேதி அதிகாலை விழுப்புரத்துக்கு ரயிலில் வந்த அவர், அங்கிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளார். அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த 2 பேர், தாங்கள் மூங்கில் பட்டுக்கு செல்வதாகக் கூறி, அப்பெண்ணை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, விக்கிரவாண்டி அருகேயுள்ள கப்பியாம்புலியூர்-செங்கமேடு சாலையில் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். இதனால், அதிர்ச்சிடைந்த அப்பெண், கூச்சலிட்டதால் அவரைத் தாக்கிவிட்டு, அந்த நபர்கள் தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில், தாக்கப்பட்ட பெண் அங்கேயே மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த விக்கிரவாண்டி போலீஸார் பெண்ணை மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வந்தனர்.
பின்னர், அந்தப் பெண் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பெண் கிடந்த இடத்தில் இருந்த செல்லிடப்பேசியைக் கொண்டு துப்பு துலங்கினர். அதில், அந்த செல்லிடப்பேசி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த பிரபு(38)என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தலைமறைவான அவரைத் தேடி வந்தனர். இதனிடையே, பிரபு சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பிரபுவும், அதே கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (34) என்பவரும் சேர்ந்து, அப்பெண்ணை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்று, தாக்கியது தெரிய வந்தது. இந்த நிலையில், அப்பெண் உயிரிழந்ததை அடுத்த, வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸார் விசாரிக்கின்றனர்.