இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார குழுவினர் விழுப்புரம் மாவட்டத்தில் இரு தினங்கள் பிரசாரம் செய்கின்றனர்.
இதுகுறித்து, அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலர் ஏ.வி.சரவணன் வெளியிட்ட அறிக்கை:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கிய அரசியல், சுதந்திரம், பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றை மத்திய பாஜக அரசு தடுத்து வருகிறது. அரசின் தவறான கொள்கையால் விவசாயம், கைத்தறி, சிறு, குறு தொழில்கள் நலிவடைந்துவிட்டது.
மாநில அதிமுக அரசோ ஊழல் முறைகேடுகளில் சிக்கி செயலற்றுள்ளது. இத்தகைய நிலைக்கு எதிராக, மக்களிடம் அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், "இந்தியாவை பாதுகாப்போம்' என்ற முழக்கத்துடன், இந்திய கம்யூனிஸ்ட், ஏஐடியுசி சார்பில் தமிழகம் முழுவதும் பிரசார இயக்கம் நடைபெறுகிறது.
வேலூர், சென்னை, கன்னியாகுமாரி, வேதாரண்யம், தூத்துக்குடி, புதுவை ஆகிய 6 இடங்களிலிருந்து இந்தப் பிரசாரப் பயணம் தொடங்கி மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. புதுவையிலிருந்து, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் செப். 20-ஆம் தேதி பிரசார குழு புறப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், வானூர், கிளியனூர், திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை சுற்றுப் பகுதியில் பிரசாரம் செய்கிறது.
இரவு மடப்பட்டில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. செப்.21-ஆம் தேதி விழுப்புரத்தில் பிரசாரம் நடைபெறுகிறது. பிரசாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுவை மாநில செயலர் சலீம், கடலூர் மாவட்டச் செயலர் மணிவாசகம் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.