நீக்கப்பட்ட ஆசிரியர்களை பணியில் சேர்க்க வலியுறுத்தல்
ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள்,
ஜேக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை நிபந்தனையின்றி பணியில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் வரவேற்றார்.
மாநில பொதுச் செயலர் ரவிச்சந்திரன் செயற்குழு தீர்மானங்கள் குறித்தும், போராட்டம் குறித்தும் விளக்கிப் பேசினார்.
ஜேக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டதின்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி, பணியில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்து, மத்திய அரசுக்கு இணையான ஊதியமும், கடந்த ஊதிய உயர்வின்போது பறிக்கப்பட்ட தனி ஊதியத்தையும் வழங்க வேண்டும், மார்ச் மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்வுகளுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை ஆய்வுப் பணிக்கு அனுப்புவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.