விழுப்புரம் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் வட்ட வழங்கல் அலுவலக முதுநிலை ஆய்வாளர் உயிரிழந்தார்.
திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தர் (50). இவர், திருக்கோவிலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற துறை ரீதியான தேர்வில் பங்கேற்ற சுந்தர், இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை பிற்பகல் திருக்கோவிலூருக்குச் சென்று கொண்டிருந்தார்.
காணை அய்யனார் கோயில் அருகே சென்றபோது, திடீரென சாலையின் குறுக்கே மாடு வந்ததால், இரு சக்கர வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மாட்டின் மீது மோதி சுந்தர் கீழே விழுந்தார்.
இதில், பாலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சுந்தர் உயிரிழந்தார்.
விபத்து குறித்து காணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.