செஞ்சி பகுதியில் பரவும் தோல் ஒவ்வாமை காரணமாக, செஞ்சி அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாள்களில் பொது மக்கள் பலரும் சிகிச்சைபெற்றனர்.
செஞ்சி மற்றும் செஞ்சியைச் சுற்றியுள்ள அப்பம்பட்டு, கோணை, செவலரை, மேல்எடையாளம் உள்ளிட்ட கிராமங்களில் மாணவ, மாணவிகள், பெண்கள், பெரியவர்கள் என பலருக்கும் உடலில் தோல் ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கை மற்றும் கால், முதுகுப் பகுதிகளில் வீக்கம் காணப்படுகிறது.
செஞ்சி அரசு மருத்துவமனைக்கு படையெடுக்கும் இவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அரசு மருத்துவமனை வட்டாரத்தில் கூறியதாவது: கடந்த இருநாள்களில் தோல் ஒவ்வாமை பாதிப்பு காரணமாக பலர் சிகிச்சை பெற்றனர். கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழை காரணமாக இந்நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
இதுகுறித்து, தலைமை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.