விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே காரில் மது கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மரக்காணம் அருகே கூணிமேடு பகுதியில் விழுப்புரம் மாவட்ட மதுவிலக்கு சிறப்புப் படை காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில், புதுவை மாநில மதுப் புட்டிகள் 480 மற்றும் 5 லிட்டர் சாராயம் இருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக, காரில் இருந்தவரிடம் விசாரித்ததில், அவர் புதுச்சேரி, நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த மணி மகன் மணிகண்டன் (29) என்பதும், புதுச்சேரியிலிருந்து காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மதுப் புட்டிகளை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து, மதுப் புட்டிகள், சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீஸில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து மணிகண்டனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.