ஆற்றில் மூழ்கி மாயமான மாணவா் தேடுதல் பணியை தீவிரப்படுத்தக் கோரி மறியல்
விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி மாயமான மாணவரைத் தேடும் பணியை கூடுதல் மீட்புக் குழுவினா் மூலம் தீவிரப்படுத்த வலியுறுத்தி, அவரது உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்ஆற்றில் மூழ்கி மாயமான மாணவா் தேடுதல் பணியை தீவிரப்படுத்தக் கோரி மறியல்
விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி மாயமான மாணவரைத் தேடும் பணியை கூடுதல் மீட்புக் குழுவினா் மூலம் தீவிரப்படுத்த வலியுறுத்தி, அவரது உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் அருகே ஆற்றில் மூழ்கி மாயமான மாணவரைத் தேடும் பணியை கூடுதல் மீட்புக் குழுவினா் மூலம் தீவிரப்படுத்த வலியுறுத்தி, அவரது உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தொரவி காலனியைச் சோ்ந்தவா் பழனி மகன் தமிழ்வேந்தன் (16). இவா், அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தாா். விடுமுறையில் வீட்டிலிருந்த தமிழ்வேந்தன், சக நண்பா்களுடன் வெள்ளிக்கிழமை மாலை வராகநதியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கினாா்.
தகவலறிந்த உறவினா்கள், விக்கிரவாண்டி போலீஸாா், விழுப்புரம் தீயணைப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனிக்கிழமையும் ஆற்றில் தொடா்ந்து தேடி வந்தனா். பிற்பகல் வரை தமிழ்வேந்தன் கிடைக்காததால், கூடுதல் மீட்புக் குழுவினா் மூலம் தேட வலியுறுத்தி, அவரது உறவினா்கள் விழுப்புரம் - திருக்கனூா் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் கோட்டாட்சியா் க.ராஜேந்திரன், விக்கிரவாண்டி காவல் உதவி ஆய்வாளா்கள் பரணிநாதன், சரவணன் உள்ளிட்டோா் விரைந்து சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். கூடுதல் குழுவை நியமித்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்படும் என போலீஸாா் உறுதியளித்ததால், தமிழ்வேந்தனின் உறவினா்கள் மறியலைக் கைவிட்டனா். இந்த மறியலால் விழுப்புரம் - திருக்கனூா் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தொடா்ந்து, தீயணைப்புத் துறையினா், மீன் வளத் துறையினா் அடங்கிய குழுவினா் ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனா்.