விழுப்புரம் கால்நடைத்துறை அலுவலக பெண் ஊழியர் கரோனாவுக்கு பலி: அலுவலகம் மூடல்
விழுப்புரம் மாவட்டத்தில் 1926 பேருக்கு வியாழக்கிழமை வரை தொற்று ஏற்பட்டு இருந்தநிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 50 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது
விழுப்புரம் மாவட்டத்தில் 1926 பேருக்கு வியாழக்கிழமை வரை தொற்று ஏற்பட்டு இருந்தநிலையில், வெள்ளிக்கிழமை மேலும் 50 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால், பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் விழுப்புரம் கால்நடைத்துறை தலைமை அலுவலகத்தில் தட்டச்சர் பணியாற்றிவந்த விழுப்புரத்தை சேர்ந்த 32 வயது பெண், கரோனா தொற்றில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் அந்த அலுவலகம் வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகத்தில் வணிகவரி ஆய்வாளர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பிரிவு அலுவலகம் மட்டும் மூடப்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் தூய்மை பணி நடக்கிறது. செஞ்சி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேருக்கு தோற்று ஏற்பட்டுள்ளதால் தூய்மை பணி நடந்து வருகிறது.
Advertisement
அந்த காவல் நிலையத்தில் தற்காலிகமாக மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு தொற்று பரவி வருவதால் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.