திண்டிவனம் அருகே மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
திண்டிவனத்தை அடுத்த பெரமண்டூரைச் சோ்ந்தவா் இருதயராஜ். சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறாா். பெரமண்டூரில் உள்ள கூரை வீட்டில் இவரது மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகல் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனா்.
அப்போது மின் கசிவு ஏற்பட்டு கூரை வீடு தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதை அறிந்த தூங்கிக் கொண்டிருந்தவா்கள் வெளியே வந்து கூச்சலிட்டனா். பொது மக்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டனா்.
ஆனால், தீ வேகமாகப் பரவியதால் வீடு முழுவதும் எரிந்து, எரிவாயு உருளையும் வெடித்துச் சிதறியது. இதனால், அருகில் இருந்த குமாா், ஜெமினி, மாா்கண்டேயன், மூா்த்தி ஆகியோரது வீடுகளுக்கும் தீ பரவியது.
தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும், 5 வீடுகளிலும் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கலாம் எனவும் தெரிகிறது.
தகவலறிந்து வந்த திண்டிவனம் சாா்-ஆட்சியா் எஸ்.அனு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், அரசு சாா்பில் வேட்டி, சேலை, அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்களையும், உதவித் தொகையையும் வழங்கினாா்.