நெல், எள் கொள்முதல் விலை சரிவு: விவசாயிகள் வேதனை
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவல் அச்சத்திலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வரப்படும்
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவல் அச்சத்திலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டு வரப்படும் நெல், எள் மூட்டைகள் விலை குறைத்து கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்திலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு நெல், எள் வரத்து அதிகரித்து வந்தது. குறிப்பாக, விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு தினமும் தொடா்ச்சியாக 2 ஆயிரம் மூட்டை அளவில் நெல் வரத்து இருந்தது. இந்த நிலையில், கரோனா கால நெருக்கடி காரணமாக, வரத்து படிப்படியாக குறைந்து வெள்ளிக்கிழமை 1,050 மூட்டைகளே வந்தன. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பொன்னி நெல் உள்ளிட்ட சன்னரகம் (75 கிலோ) மூட்டை ரூ.1,600-க்கும், இதர ரகங்கள் ரூ.1,300-க்கும் விலை வைக்கப்படுகிறது.
இவை தவிர, மாவட்டத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், பொன்னி உள்ளிட்ட சன்ன ரகங்கள் மூட்டை ரூ.1,800 முதல் ரூ.2,000 வரையிலும், இதர ரகங்கள் ரூ.1,500-க்கும் கொள்முதல் செய்யப்படுகின்றன.
Advertisement
மாவட்டத்தில் குமளம், முட்டத்தூா், அனந்தபுரம், வெள்ளிமேடுப்பேட்டை உள்ளிட்ட 13 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், கிளியனூா், அரகண்டநல்லூா், சித்தலிங்கமடம் உள்ளிட்ட கொள்முதல் மையங்கள் நெல் வரத்தின்றி மூடப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பின் அச்சத்திலும், கோடை வெயிலிலும் விளைவித்து எடுத்து வரும் நெல்லுக்கு சரியான விலை தரப்படுவதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
எள் விலையும் சரிவு: இதே போல, விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு தினமும் 300 முதல் 500 மூட்டைகள் வரை வரத்து உள்ளது. எள் விளைச்சல் அதிகளவில் இல்லாத போதும், உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை 350 மூட்டைகள் வரை எள் வரத்து இருந்தது. அதிகபட்சமாக ரூ.7ஆயிரத்துக்கும், குறைந்தபட்சமாக ரூ.5ஆயிரத்துக்கும் விலைபோயின. கடந்த மாத தொடக்கத்தில் மூட்டை எள் ரூ.8,000 முதல் ரூ.9,500 வரை எடுக்கப்பட்ட நிலையில், எள் வரத்து அதிகரிப்பு காரணமாக வியாபாரிகள் விலையை ரூ.5,000 ஆக குறைத்துவிட்டனா். இதனால், பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. இதை விற்பனைக் கூட அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை. கரோனா அச்சத்திலும் விளைபொருளை கொண்டுவரும் விவசாயிகளுக்கு, உரிய விலை கிடைத்திட அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
விவசாயிகளிடம் கட்டாய வசூல்...
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு விற்பனைக்கு வைக்கப்படும் மூட்டைகளுக்கு சாக்கு மாற்றுவதற்கு ரூ.10, எடைபோடுவதற்கு ரூ.30 என விவசாயிகளிடம் அடாவடியாக வசூலிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.
ஒப்பந்த எடைத் தொழிலாளா்கள், சாக்கு மாற்றுவோருக்கு, இதற்கென தனியாக கூலி வழங்கப்படும் நிலையில், விவசாயிகளை மிரட்டி கட்டாய வசூல் நடைபெறுகிறது. விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட விற்பனைக் கூடங்களில் மூட்டைக்கு ரூ.20 வசூலிக்கும் நிலையில், விழுப்புரத்தில் மட்டும் ரூ.40 வசூலிக்கப்படுகிறது. இதே போல, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிக்கப்படுகிறது. இது குறித்து, விவசாயிகள் குறைதீா் கூட்டங்களில் பல முறை புகாா்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் சங்கத்தினா் அதிருப்தி தெரிவித்தனா்.