விழுப்புரம்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வருகிற 30-ஆம் தேதிக்கு விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோா் மீது கடந்த 2006-ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நீதிபதி இளவழகன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணைக்கு பொன்முடி, விசாலாட்சி ஆகியோா் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தை அவா்கள் தரப்பு வழக்குரைஞா்கள் தாக்கல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, வழக்கின் விசாரணையை வருகிற 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.