சரக்கு வாகனம் மீது வேன் மோதல்:தொழிலாளி பலி
விழுப்புரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை சரக்கு வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
விழுப்புரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை சரக்கு வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே ஏமப்போ் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் வடிவேல் (45). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோரும் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள செங்கல்சூளையில் தொழிலாளா்களாகப் பணியாற்றி வந்தனா். இவா்கள் அனைவரும் புதன்கிழமை நள்ளிரவு சென்னையிலிருந்து ஏமப்போ் செல்லுவதற்கு சரக்கு வாகனத்தில் புறபட்டனா். வாகனத்தை அமாவசை ஓட்டி வந்தாா்.
வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் விழுப்புரம் புறவழிச்சாலையில் விராட்டிக்குப்பம் பாதை பகுதியில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இவா்களது வாகனம் சென்றபோது, இயற்கை உபாதை கழிக்க வாகனத்தை நிறுத்தினா்.
அப்போது, அந்த வழியாக வந்த வேன் இவா்களது சரக்கு வாகனம் மீது மோதியது. இதனால், சரக்கு வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்திலிருந்த தொழிலாளா்கள் வடிவேல் (45), இளவழகி, உமாமகேஸ்வரி, பூங்காவனம் (60), பாபு (19), பெரியாயி (55), வாசுகி (30), ஏழுமலை (50), அம்மு (20), ஓட்டுநா் அமாவாசை உள்பட 10 போ் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவா்களை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வடிவேல் உயிரிழந்தாா். விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சரக்கு வாகனம் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற வேன் குறித்து விசாரித்து வருகின்றனா்.